ட்விட்டரில் அறிமுகமாகும் “எடிட்” வசதி! ஆனால் அனைவருக்கும் கிடையாதாம்!

#technology #Article #today
ட்விட்டரில் அறிமுகமாகும் “எடிட்” வசதி! ஆனால் அனைவருக்கும் கிடையாதாம்!

செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் பேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன. பல்வேறு செய்திகளும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது. அவ்வாறு பரவும் செய்தியில் தவறு ஏதேனும் இருந்தால், ட்விட்டரில் அதை திருத்த (எடிட் செய்ய) இயலாது. மாறாக நாம் மொத்த பதிவையே நீக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு தீர்வு காண மற்ற சமூக வலைதளங்களை போல பதிவுகளை திருத்தும் வசதியை வழங்குமாறு பல ஆண்டுகளாக பயனர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர், ட்விட்டர் நிறுவனமும் இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிந்து இருந்தது. இந்நிலையில் பதிவுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த எடிட் செய்யும் வசதி குறிப்பிட்ட சில பயனர்களுக்கு, குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டுமே திருத்தும் வசதி முதற்கட்டமாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய தவறான மொழி வடிப்பானை(new abusive language filter) ட்விட்டர் அறிமுகப்படுத்த உள்ளது. இது பயனர்களை புண்படுத்தும் ட்வீட்களை நீக்குவதற்குப் பதிலாக அவற்றைத் திருத்த அனுமதிக்கிறது.

இந்த அம்சம் ட்வீட்டில் பயன்படுத்தப்படும் புண்படுத்தக்கூடிய மொழியை ட்விட்டர் பயனர்களுக்குத் தெரிவிக்கிறது. பின்னர் அதை பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் ட்வீட்டைத் திருத்த பரிந்துரைக்கிறது. அந்த ட்வீட்டை பதிவு செய்ய முயற்சிக்கும் தருணத்தில், ட்வீட்களைத் திருத்துதல், ட்வீட்களை நீக்குதல் மற்றும் ட்வீட்டை பதிவு செய்தல் ஆகிய மூன்று விருப்பங்களைக் காட்டும்.

இதையும் மீறி ட்வீட்டை பயனர் பதிவு செய்ய விரும்பினால் அதற்கான அனுமதியையும் ட்விட்டர் அளிக்கிறது. இந்த எடிட் செய்யும் வசதி குறித்த தகவலை ட்விட்டர் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் எடிட் வசதி ட்விட்டர் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.